தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு அனைத்துத் தரப்பினரும், தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வாரம், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால், தமிழகத்தில் ஒரே நாளில் 172 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது. இரண்டாவது நாளன்று 150 கோடிக்கும் டாஸ்மாக் மூலம் வசூலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றத்திடம், டாஸ்மாக்க்கில் பொதுமக்கள் எவ்வித சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை எனவும், அதற்குரிய வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களையும் மக்கள் நீதிமய்யம் சார்பில் சமர்பிக்கப்பட்டது. இதனைப் பார்த்த நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. ஆன்லைன் மூலம், வியாபாரம் செய்ய அனுமதி அளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழகத்தின் வருவாய் கணிசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய ட்விட்டர் கணக்கில், இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்தால், மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளைப் பாருங்கள் எனக் கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020