நான் முதல்வரல்ல! அப்படியென்றால் யார் தான் சிஎம் ஆவார்?

12 March 2020 அரசியல்
rajinipressmeet.jpg

இன்று காலையில் நடைபெற்ற பரபரப்பான செய்தியாளர்கள் சந்திப்பில், அரசியல் கட்சிகளை கலங்கடிப்பார் என நினைத்தால், தன்னுடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைக் கலங்கடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

நான் அரசியலுக்கு வருவது உறுதி என முழங்கிய ரஜினிகாந்த், இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அனைவரும் இன்று தன்னுடையக் கட்சியின் பெயரினை அறிவிப்பார், கட்சியின் முதல் மாநாட்டினை அறிவிப்பார் என, அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் எனும், தனியார் விடுதியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், எனக்கு 70 வயது நெருங்கிவிட்டது. பதவிக்கு வர வேண்டும் என நான் ஆசைப்பட்டு இருந்தால், 45 வயதிலேயே வந்திருப்பேனே, நான் ஆசைப்பட்டதை விட, அதிகமாகவே எனக்குக் கொடுத்துள்ளீர்கள். அதனால், நான் இனி பதவிக்கு வந்த அனுபவிக்கப் போவது என எதுவும் இல்லை. ஆனால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதற்காக, நான் அரசியலுக்கு வருவதாகக் கூறினேன்.

ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் சந்திப்பில் ஏமாற்றம் உள்ளது என சூசகமாகத் தெரிவித்து இருந்தார். அது குறித்து, விளக்கம் அளிக்கவே இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார் எனலாம். நான் ஆன்மீகவாதி, பதவிக்கு ஆசைப்பட்டால் அது ஆன்மீகத்திற்குச் செய்யும் குற்றம். அதனை நான் செய்யமாட்டேன். அதற்கு மாறாக, தன்னுடையக் கட்சியில் இருக்கும் ஒருத்தர் முதல்வராக இருப்பார் எனவும், நான் கட்சியின் தலைவராக இருப்பேன் எனவும் கூறினார். முதல்வர் பதவி மீது ஆசை இல்லை எனவும், 50 வயதிற்குள் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் எனவும் கூறினார்.

அது மட்டுமின்றி கட்சியின் பெயரினைக் கூறி, கட்சி நிர்வாகிகள் பலரும் பணம் சம்பாதிப்பர். அது எனக்குப் பிடிக்காது. இது காலம் காலமாக, நடைபெற்று வரும் நிகழ்வு. இதனை, அனைத்துக் கட்சியினரும் செய்து வருகின்றனர். இது நம்முடையக் கட்சியில், நடக்கக் கூடாது. நன்றாக படித்த, மக்கள் வளர்ச்சியின் மீது அக்கறையுள்ள மனிதர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு பொறுப்புகளை வழங்குவோம் என்றார்.

இதனால், உண்மையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அப்செட்டாகி விட்டனர். என்று தான் கூற வேண்டும். இத்தனை நாட்களாக, அவர் வருவார் முதல்வர் ஆவார், நம்மையும் கவனிப்பார் என நினைத்தவர்களுக்கு ரஜினியிடம் இருந்து கிடைத்திருப்பது என்னமோ, அல்வா தான்!

HOT NEWS