முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்ற ஏழு பேர் விடுதலைக் குறித்து, மாநில அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து, தற்பொழுது ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
சிறையில் இருக்கின்ற பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தன்னுடைய மகனுக்குப் பல்வேறு உடல்உபாதைகள் இருப்பதாகவும், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் ஆட்கொணர்வு மனு அளித்தார். இதனை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றுக் கூறினார்கள்.
தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், கடந்த ஆண்டு தான் 90 நாட்கள் பரோலில் வெளியில் வந்தார். எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், பரோல் வழங்க முடியும் என்ற சிறை விதியினைக் காரணம் காட்டி, பரோல் வழங்க முடியாது என்றுக் கூறினார். அதற்கு 2018ம் ஆண்டே, இவர்களை விடுதலை செய்வது குறித்தத் தீர்மானத்தினை, தமிழக அரசு சட்ட சபையில் எடுத்துள்ள பொழுது இன்னும் ஏன் விடுதலை செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், இது குறித்து விரிவான அறிக்கையினை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறினர். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. ஏற்கனவே, ஆளுநரின் உத்தரவிற்காக தமிழக அரசு காத்துக் கொண்டு இருக்கின்றது எனவும், தற்பொழுது ஆளுநர் தரப்பில் புதிய விளக்கக் கடிதம் வந்துள்ளதாகவும் தெரிவித்தது. அதில் ஜெயின் கமிஷனால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணையானது, இன்னும் முடிவடையாத காரணத்தால் ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை எனப் பதிலளிக்கப்பட்டது.
இதனையடுத்து, வருகின்ற 3ம் தேதி பரோல் வழங்குவது குறித்து பதிலளிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.