ராஜ்கிரண் உருக்கமான வேண்டுகோள்! இஸ்லாமியர் நம்முடைய சொந்தங்கள்!

19 December 2019 சினிமா
rajkiran.jpg

இந்தியா முழுவதும், தற்பொழுது திருத்தப்பட்ட தேசியக் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்குப் பலரும் தங்களுடைய எதிர்ப்பினைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான ராஜ்கிரண் தற்பொழுது பரபரப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது காலம் காலமாக புளித்து போன விஷயம். இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள் போலவும் அல்லது பாகிஸ்தான் தான் அவர்களது நாடு என்பது போலவும் பாமர மக்களின் மனங்களில் பிரிவினையை உண்டாக்குவதற்கான நச்சு கருத்துகளை காலம் காலமாக விதைத்து வந்தனர், வருகின்றனர்.

இந்த பொய் பிரசாரங்கள் ஒருகாலத்திலும் செல்லுபடியாகாது. சத்தியத்தை யாராலும் புதைத்துவிட முடியாது. இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் ரத்த சொந்தங்கள். இந்து மதத்தில் உள்ள தீண்டாமை போன்ற இன்ன பிற கொடுமைகளால் அந்த வாழ்க்கை முறையில் இருந்து தப்பித்து சுயமரியாதையை பேணவும், சமத்துவத்தை அனுபவிக்கவும், அதற்கு வழிவகுத்து தந்த இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு மாறியவர்கள்.

ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிடித்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து கொள்வது, அவரவருடைய அடிப்படை சுதந்திரம். இதை இந்திய அரசியல் சாசன சட்டம் உறுதி செய்திருக்கிறது. ஒரே தாய்-தந்தையருக்கு பிறந்த பிள்ளைகள் அவரவருக்கு பிடித்தமான வாழ்க்கைமுறையை தேர்ந்தெடுத்து கொள்வதில்லையா, அதேபோல தான் இதுவும்.

எல்லா மதத்தினரும் இந்திய தேசத்தின் பிள்ளைகளே. என் தகப்பனாரின் மூதாதையர்கள் சேதுபதி சீமையின் மறவர்குளம். என் தாயாரின் மூதாதையர்கள் சேதுபதி சீமையின் மீனவர் குளம். எனது மூதாதையர் காலத்தில் சேதுபதி சீமையில் 18 சாதிகள் இருந்தன என்றும், அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி சாதிகளற்று, சம்பந்தம் செய்துகொண்டார்கள் என்றும், என் தாயார் எனக்கு சொல்லியிருக்கிறார்.

அதனால் எல்லா சாதியிலும் எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு... பேதங்கள் அற்றதே பெருவாழ்வு. அதில் மனிதநேயமே மாண்பு, என அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

HOT NEWS