ருத்ராபிஷேக பூஜையுடன், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியது.
கடந்த ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட எவ்வித தடையும் இல்லை என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு கோயில் கட்டுவதற்கு அடுத்து மூன்று மாதங்களுக்குள் சிறப்பு அறக்கட்டளையை உருவாக்க வேண்டும் எனவும் கூறியது. நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற அறக்கட்டளையினை மகந்த் நிருத்ய கோபால் தாஸ் தலைமையில், மத்திய அரசு உருவாக்கியது.
அந்த அமைப்பானது, கடந்த ஏப்ரல் மாதம் மிக எளிமையான முறையில் பூமி பூஜையினை நடத்தியது. இந்த சூழ்நிலையில், ராமர் எப்பொழுதும் எதைச் செய்தாலும், சிவனை வணங்கிய பின்னரே செய்வார். அதனால், சிவபூஜை செய்ய அறக்கட்டளையினரும், சாதுக்களும் முடிவு செய்தனர். அவர்கள் இதற்காக, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தினை வரவேற்றனர்.
கருப்பு நிற பசு மாட்டின், 11 லிட்டர் பசும்பாலினைக் கொண்டு, சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சிலைகள் மற்றும் பிற விஷயங்களை அப்புறப்படுத்தினர். விரைவில், இங்கு கோயில் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில், முதலில் பிரதமர் கலந்து கொள்வதாக இருந்தது. இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக அவர் இதில் கலந்து கொள்ளவில்லை.