தமிழகத்தில் நாளுக்கு நாள், கொரோனா வைரஸ் பாதிப்பானது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது கோயம்பேடு சந்தை.
இங்கு வந்து சென்றவர்களில், 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அந்த சந்தையானது மூடப்பட்டு, அதற்குப் பதிலாக காய்கறிக் கடைகளை திருமழிசைப் பகுதியில் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அவர் பேசுகையில், பல லட்சம் பேருக்கு கருணைத் தொகையானது இந்த ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்டு உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்காக, சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்பொழுது, சென்னையில் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, நடமாடும் பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.
உணவுப் பிரச்சனைகள் ஏற்படாத வகையில், அனைவருக்கும் ரேஷன் மூலம், 1000 ரூபாய் பணமும், அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு உள்ளன. இது ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. தற்பொழுது மே மாதத்திற்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஜூன் மாதமும் வழங்கப்படும்.
ஜூன் மாதம், அரிசி அட்டைத்தாரர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தற்பொழுது வரை, சென்னையில் சுமார், 1247 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கின்றது எனவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். தற்பொழுது 4,000 படுக்கைகள் தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை எனவும், அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.