சாத்தான்குளம் வழக்கில் தொடர்புடையவர்களாக, மேலும் ஐந்து பேர் சிபிசிஐடிப் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த மாதம் 19ம் தேதி அன்று, சாத்தான்குளம் காவல்துறையினர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த, ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் என்பவர்களை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்ததை அடுத்து, அது குறித்து விசாரணை நடத்தி சிபிசிஐடிப் பிரிவு போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதனையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தினைச் சேர்ந்த ஐந்து காவலர்களை ஏற்கனவே, சிபிசிஐடிப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்பொழுது இந்த வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது. அவர்கள் இந்த வழக்கில் பொறுப்பேற்கும் வரை, இந்த வழக்கினை தொடர்ந்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக, சாத்தான்குளம் காவல்நிலையத்தினைச் சேர்ந்த சிறப்பு எஸ்ஐ பால்துரை, மற்றும் காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உட்பட 5 பேரினை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.