சாத்தான்குளம் விவகாரம்! கைது செய்யப்பட்ட எஸ்ஐ பால்துரை கொரோனாவால் பலி!

10 August 2020 அரசியல்
sathankulamlockup.jpg

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, போலீசாரில் எஸ்ஐ பால்துரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில், செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோரை விசாரணை செய்வதற்காக போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை அடித்து, துன்புறுத்தி கொடுமை செய்துள்ளனர். இதில், நெஞ்சுவலி ஏற்பட்ட பென்னிங்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். அதே போல், அவருடைய தந்தையும் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதனைக் கண்டித்து மனித உரிமைகள் ஆணையம், காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதுமட்டுமின்றி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்டப் பத்து பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

இவர்களை விசாரிக்க டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் எட்டு பேரில், ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களைப் போல், சிறையில் உள்ள பால்ராஜ்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 7ம் தேதி முதல் அவர் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இருப்பினும், 56 வயதான பால்ராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

HOT NEWS