சாத்தான்குளம் வழக்கானது, தற்பொழுது சிபிஐ மூலம் விசாரிக்கப்பட உள்ளது.
கடந்த மாதம் ஜூன் 19ம் தேதி அன்று, சாத்தான்குளம் காவல்நிலையத்தினைச் சேர்ந்த காவலர்கள், அப்பகுதியில் கடை வைத்துள்ள ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோரை கைது செய்து அழைத்து சென்றனர். அவர்களிடம் விசாரணை என்ற பெயரில், அடித்துத் துன்புறுத்தி உள்ளனர்.
இதில், திடீரென்று பென்னிங்ஸிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், அவரை அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், பென்னிங்ஸ் திடீரென்று மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, திடீரென்று அவருடைய தந்தை ஜெயராஜ்ம் மரணமடைந்தார். இதனால், சாத்தான்குளத்தில் பெரும் பரப்பு ஏற்பட்டது.
போலீசார், அடித்தே அவர்களைக் கொன்று விட்டதாக அப்பகுதி மக்கள் கடுமையாகக் குற்றம் சாட்டினர். இது குறித்து தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்தது. இந்த வழக்கானது சிபிசிஐடிப் பிரிவிற்கு மாற்றப்பட்டது. நீதிமன்றத்தின் சார்பில், நீதிபதி பாரதிதாசன் காவல்நிலையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதில், அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. அவர்களின் உடலில் கடுமையானக் காயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த ரேவதி என்றப் பெண் காவலர், அவர்கள் இருவரும் போலீசாரால் துன்புறுத்தப்பட்டத்தாக, வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, ஐந்து காவலர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சூழ்நிலையில், தற்பொழுது இந்த வழக்கானது சிபிஐக்கு மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், தற்பொழுது இந்த வழக்கினை சிபிஐ கையில் எடுத்து உள்ளது.