கொரோனா வைரஸின் இரண்டாவது பரவல் நிலையானது, மிகவும் மோசமாக இருக்கும் என அமெரிக்க சுகாதாரத்துறை தலைவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்கா அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 8,52,703 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 77,210 பேர் பூரண குணமடைந்து உள்ளனர். 47,750 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். இந்நிலையில், இது குறித்து தினமும் அமெரிக்க அதிபர் டொனாலாட் ட்ரம்பும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க நாட்டின் சிடிசி அமைப்பின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான ராபர்ட் ரெட்ப்ல்ட் பேசினார். அவர் பேசுகையில், இந்த வைரஸ் தொற்றானது, மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. இது அடுத்தக் கட்டத்திற்கு சென்றால், கண்டிப்பாக ஆபத்து தான். இதன் அடுத்தக் கட்டம் என்பது வைரஸ் தொற்று மற்றும் காய்ச்சல் ஆகும்.
அவ்வாறு மட்டும் ஏற்பட்டு விட்டால், அவ்வளவு தான். மக்கள் கொத்துக் கொத்தாக மடிய ஆரம்பித்துவிடுவர். அதற்குள் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமின்றி, இந்த வைரஸானது குளிர்காலத்தில் அதிவேகமாகப் பரவக் கூடியது. அதற்குள், அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், நம்முடைய நிலைமை இன்னும் மோசமாகும் எனக் கவலைத் தெரிவித்தார்.