அண்ணாப் பல்கலைக் கழகத் தேர்வுகள் தற்பொழுது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பல நாடுகள் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்து உள்ளன. பொதுமக்கள் அனைவரும், சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும் என கோரியும் வருகின்றன. இந்தியா முழுக்க, வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதனால், பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், பொதுத் தேர்வு எழுதுவதற்கு தயாராக இருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களைத் தவிர, 12ம் வகுப்பு தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் தேர்வில் பாஸ் செய்துவிட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அவ்வாறு செய்ய இயலாது. இதனால், பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்றக் கேள்வியானது, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில், அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
தற்பொழுது லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஏப்ரல் மற்றும் மே மாதத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், லாக்டவுன் தளர்த்தப்பட்ட உடன், இது குறித்த தேர்வு அட்டவணை வெளியாகும் எனவும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.