மத்தியப் பிரதேச முதல்வராக சிவராஜ்சிங் சவ்கான் பதவியேற்றார். இதனால், அம்மாநிலத்தில், மீண்டும் பாஜக தன்னுடைய ஆட்சியினைக் கைப்பற்றியது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில், 22 எம்எல்ஏக்கள் தங்களுடையப் பதவியினை ராஜினாமா செய்தனர். இதனால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸின் ஆட்சியானது, கவிழும் நிலைக்கு வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சிக்கு போதிய ஆதரவு இல்லாத காரணத்த்தினால், அக்கட்சியானது அதிகாரத்தினை இழந்தது.
இதனையொட்டி, முதல்வராக இருந்த கமல்நாத் தன்னுடையப் பதவியினை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவினைத் தொடர்ந்து, மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் பாஜகவினை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, நேற்று முதல்வராக நான்காவது முறையாக சிவராஜ்சிங் சவ்கான் பதவியேற்றார்.
அவர் பேசுகையில், தற்பொழுது பரவி வரும் கோவிட்-19 பாதிப்பிலிருந்து மத்தியப் பிரதேசத்தினைப் பாதுகாப்பதே தம்முடைய முதல் பணி என, அவர் தெரிவித்தார்.