எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில், குற்றவாளிகாகக் கருதப்படும் தவுபிக் மற்றும் ஷமீமிற்கு உதவியதாக ஏற்கனவே, பெங்களூருவினைச் சேர்ந்த மெகபூப் பாஷாவினைக் கைது செய்தனர். இதனிடையே, இவர்களுக்கு துப்பாக்கிக் கொடுத்து உதவியதாக, காஜா மொய்தீன் என்பவரை டெல்லியில் போலீசார் கைது செய்தனர். இந்தத் துப்பாக்கியினை இஜாஸ் பாஷாவிடம் கொடுத்து இருக்கின்றார்.
இந்நிலையில், எஸ்ஐ வில்சனைக் கொலை செய்தவர்கள் பயன்படுத்திய சிம் கார்டுகளை, காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலின் அருகில் அமைந்திருக்கும் ஒரு கடையில் இருந்து வாங்கியிருப்பது, தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிம் கார்டு நிறுவனத்தின், டீலரின் உதவியுடன், தமிழக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், கொலை செய்வதற்கு போலியான முகவரியினைக் கொடுத்து, புதிதாக ஒன்பது சிம் கார்டுகளை வாங்கியிருக்கின்றனர். அந்த சிம் கார்டுகளைத் தங்களுடையத் தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தியும் இருக்கின்றனர். இதனை, தமிழக குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 9 பேரினை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர்கள் ஒன்பது பேரையும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, தவுபிக் மற்றும் ஷமீம் ஆகியோருக்காக வாதாட வந்த வக்கீல்கள் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.