சாத்தான் குளத்தினைச் சேர்ந்த தந்தை மகன் ஆகியோர் சிறையில் இறந்த சம்பவத்தினை, தாமாக முன் வந்து விசாரிக்க உள்ளதாக மதுரை கிளை கூறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பகுதி சாத்தான் குளம். இந்தப் பகுதியில் சிறிய அளவில் மொபைல் கடையினை 31 வயதுடைய பென்னிங்ஸ் என்பவர், நடத்தி வந்தார். கடந்த 20ம் தேதி அன்று, ஊரடங்கின் பொழுது, அத்துமீறிக் கடையைத் திறந்து நடத்தி வந்ததாக, பென்னிங்ஸ் மற்றும் அவருடைய தந்தை ஜெயராஜ் மீது வழக்குத் தொடர்ந்து போலீசார், அவரைக் கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சிறையில் இருந்த பென்னிங்ஸிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதே போல், நேற்று காலையில் அவருடைய தந்தையும் திடீரென மர்மமாக உயிரிழந்தார். இது, தற்பொழுது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு வணிகர் சங்கம், பெரும் எதிர்ப்பினை காட்டி உள்ளது. இது குறித்து பேசிய தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் என்றுக் கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் அடைக்கப்பட்டு இருந்த காவல்நிலையத்தின் 2 எஸ்ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், அந்தக் காவல்நிலையத்தில் பணிபுரிந்த மாற்ற காவலர்கள் அனைவரும், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது குறித்து, விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடிவு செய்துள்ளது. இது குறித்து, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு, பல எதிர்கட்சிகளும் தங்களுடைய எதிர்ப்பினை காட்டி வருகின்றனர்.