ஸ்பெயினில் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்ற நிலையில், தற்பொழுது அந்த நாட்டு அரசாங்கமானது, அந்த நாட்டிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும், தற்காலிகமாக அரசுடைமை ஆக்கியுள்ளது.
அங்கு தற்பொழுது வரை, சுமார் 10,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 310 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வைரஸானது பரவாமல் இருக்க, தன்னுடைய நாட்டின் எல்லைகளை அந்நாட்டு அரசாங்கம் மூடியுள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டில் அவசர நிலையையும் பிரகடனப்படுத்தி உள்ளது.
இதனால், அந்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்வுகளும், காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதில் எவ்வித சமரசமும் இல்லை எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பெட்ரோ சான்சஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், பொதுமக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தேவையில்லாமல் பொது இடங்களில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், வேலைக்குச் செல்லவும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாங்கவும் மட்டுமே பொதுமக்கள் வெளியில் வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அந்நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் உள்ள பார்கள், கடைகள், உணவகங்கள், திரையறங்குகள் உள்ளிட்ட பலவும் மூடப்பட்டு உள்ளன. இதனால், அந்நாடே போர்க்காலத்தில் இருப்பது போல் உள்ளதாக, அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.