இலங்கையினை ஆண்ட இராவணன் பயன்படுத்திய விமானம் பற்றி ஆய்வு செய்ய உள்ளதாக, இலங்கை தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.
இலங்கையினை ஆண்ட இராவணன், சீதையினை கடத்திச் செல்வதற்காக புஷ்பக விமானத்தினைப் பயன்படுத்தி உள்ளான் என வால்மீக இராமாயணத்திலும், கம்ப இராமாயணத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்தக் குறிப்புகளில் இருந்து இராவணனிடம் விமானம் இருந்தது உறுதியாகி உள்ளது. கடந்த வாரம், இராமன் நேபாளத்தில் பிறந்தவர் எனவும், அதற்கான சான்றுகள் நேபாளத்தில் உள்ளன எனவும் அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் அவருக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், தற்பொழுது நேபாளத் தொல்லியல் துறையானது, நேபாளத்தில் இராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் பிர்குஞ்ச் பகுதியில் ஆய்வு நடத்த உள்ளது. இந்த சமயத்தில், தற்பொழுது இலங்கையிலும் இராவணன் குறித்த ஆய்வினை இலங்கை அரசு செய்ய உள்ளது. இலங்கை அரசின் விமானத்துறையானது, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
அதில், இராவணன் தான் உலகிலேயே முதன்முதலாக விமானத்தினைப் பயன்படுத்தியவன் என்பது, வரலாற்று உண்மை. இது குறித்த ஆதாரங்கள் மற்றும் குறிப்புகள் இருந்தால், தெரிவிக்கவும் என்று அறிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுக் கருதரங்கினையும் விரைவில் அந்நாட்டு அரசு நடத்தத் திட்டமிட்டு உள்ளது.