கிராம விவசாயியிடம் 50,000 லஞ்சம் கேட்ட துணை ஆட்சியர் தினகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் வீட்டில் இருந்து 76 லட்ச ரூபாயினையும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைப்பற்றினர்.
வேலூர் மாவட்டம் இரும்புலி கிராமத்தில் வசித்து வரும் ரஞ்சித்குமார் என்பவர், தன்னுடைய நிலப்பத்திரத்தினை விடுவிக்கக் கோரி, முத்திரைத்தாள் தனி துணை ஆட்சியரிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு, 50,000 ரூபாய் கொண்டு வர வேண்டும் என, துணை ஆட்சியர் தினகரன் என்பவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இதனை அறிந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்கம் போல், யாரும் அறியாத விதத்தில் வந்து, தினகரன் கையில் பணம் வைத்திருந்த பொழுது, அவருடைய காரில் வைத்தே அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அந்த காரில் இருந்த தினகரன் மற்றும் ஓட்டுநர் ரமேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தினகரனின் வீடு காட்பாடியில் உள்ளது. அவருடைய வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், 76 லட்ச ரூபாயினைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.