சூரத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியே புகை மூட்டமாகக் காட்சியளித்தது.
சூரத் நகரில், பல நூற்றுக்கணக்கான துணிக் கடைகள் உள்ளன. சூரத் நகரமே, துணிகளுக்குப் பெயர் பெற்றது. அங்குள்ள ரகுவீர் எனும் வணிக வளாகத்தில், பல துணிக் கடைகள் உள்ளன. நேற்று இரவு வழக்கம் போல, கடைகளை அடைத்த வியாபாரிகள் அவரவர் வீட்டிற்குச் சென்று விட்டனர். அப்படி இருக்கையில், இன்று அதிகாலையில், தரைதளத்தில் இருந்த துணிக் கடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
துணிக் கடையில் பாலிஸ்டர் ரக துணிகள் அதிகளவில் இருந்ததால், தீயானது மளமளவெனப் பரவியது. இந்த தீயானது அருகில் இருந்த துணிக் கடைகளுக்கும் பரவியது. இதனையடுத்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, அந்தப் பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள், தீயணைக்கும் வாகனத்துடன் விரைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், அந்தக் கட்டிடத்தின் மேல் தளத்திற்கும் தீயானது பரவியது. இந்த விபத்தில், பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. சுமார் 57 தீயணைக்கும் வாகனங்களை பயன்படுத்தி, அந்தக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயானது அணைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.