ஜோதிகாவின் கருத்தில் மாற்றமில்லை! சூர்யா உறுதி!

29 April 2020 சினிமா
suriya.jpg

நடிகர் ஜோதிகாவின் கருத்தில் மாற்றமில்லை எனவும், நான் அதில் உறுதியாக இருப்பதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகை ஜோதிகா பேசியிருந்தார். அது தற்பொழுது சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, அதற்கு எஸ்வி சேகர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

அதில் மரம் சும்மா இருந்தாலும், காற்று விடுவதில்லை என்கிற கருத்து, ஊடக விவாதங்களுக்கு அப்படியேப் பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில், எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக வலைதளங்களில் விவாதமாகவும் மாறி வருகின்றது.

கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்துவதை, சிலர் குற்றமாகக் கருதுகின்றார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற பெரிய ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கின்றார்கள். மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளை படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும், மருத்துவ மனைகளையும் இறைவன் உறையும் இடமாகக் கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் உறுதியாகவே உள்ளோம். மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லித் தர விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

HOT NEWS