தமிழகத்தில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.
அவர் பேசுகையில், தமிழகத்திற்கு வெளியில் இருந்து வந்திருந்த பலரில், ஒன்பது பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சந்தேகப்படும் விதத்தில் இருந்த நபர்களும், தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிக விலைக்கு, சானிட்டைசர்கள் மற்றும் முகக் கவசம் விற்றது தொடர்பாக, நாற்பது மருந்து விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 443 பேரிடம் இந்த வைரஸ் தொற்று இருக்கின்றதா என்ற சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 352 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 82 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
அதன் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்கும் என நம்புகின்றோம். முகக் கவசமானது, எட்டு ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் விற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதிப்பு உள்ள ஒன்பது பேரின் உடல்நிலையும் சீராகவே உள்ளது எனவும் பயப்பட தேவையில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.