தமிழக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸிற்கு தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகள், குறிப்பாக சென்னையில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
இந்த சூழ்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில், தனியார் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு மூன்று லட்ச ரூபாயானது கொரோனா சிகிச்சைக்காக வசூலிக்கப்படுவது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5000 ரூபாயினை வசூலித்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு ஒரு நாளைக்கு 9000 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற விரும்புபவர்கள், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டதினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அவர்களிடம் அரசு நிர்ணயித்த அளவினை விட அதிகளவில் வசூலிக்க முயற்சித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டத்திற்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. யாராவது அவ்வாறு அதிகளவில் வசூலித்தால், 1800 425 3993 எண்ணினைத் தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.