தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எப்பொழுது செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என, மாநில உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. வருகின்ற மே-3ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது தற்பொழுது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடப்பட்டுள்ள விடுமுறையானது, நீட்டிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வானது இன்னும் நடத்தப்படவில்லை.
அனைத்து அரசு வேலைகளுக்கும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு அடிப்படையான ஒன்று என்பதால், அதனை நடத்தியேத் தீர வேண்டும் என, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகம் உட்பட, பல பல்கலைக் கழகப் பருவத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. இது குறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, அக்னி நட்சத்திரம் ஆக உள்ளதால், மே மாதம் முழுக்க கோடை விடுமுறை விடப்படுகின்றது. ஜூன் மாதம், நிலைமைக் கட்டுக்குள் வந்ததும், ஜூன் மாதமே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.