தமிழகத்திற்கு தற்பொழுது கொரோனா வைரஸினை பரிசோதிக்கும் கருவிகளை, டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இது குறித்து, அறிவிப்பு ஒன்றினை தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாண்புமிகு அம்மா அரசு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகின்றது. தமிழ்நாடு அரசுக்கு தோள் கொடுக்கும் விதமாக பொதுமக்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் கொரோனா வைரஸ் நோய் நிவாரண நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை மனமுவந்து அளித்து வருகின்றன. மேலும், கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டுபிடிக்கவும், சிகிச்சை அளிக்கவும் தேவையான கருவிகளையும் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது டாடா நிறுவனம், கொரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்காக சுமார் 8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் கருவிகளை தமிழ்நாடு அரசிற்கு வழங்கி உதவி செய்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அந்நிறுவனத்தின் உதவிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள், தமிழ்நாடு மக்களின் சார்பாக, நன்றித் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.