ஏர் இந்தியாவினை டாடா நிறுவனம் வாங்க இருப்பது, உறுதியாகி உள்ளது. மேலும், அத்துடன் சேர்த்து வேறு பிற விமான நிறுவனங்களையும், அந்நிறுவனம் வாங்க உள்ளது.
இந்தியாவின் சொந்த விமான நிறுவனமான, ஏர் இந்தியா விமான நிறுவனத்தால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும், அந்த நிறுவனத்தினை வருகின்ற மார்ச் மாதத்திற்குள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மத்திய அரசு கூறியது. இதனால், பெரிய அளவில் சர்ச்சைகள் உருவாகின. இருப்பினும், இதைப் பற்றி எல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை.
ஏர் இந்தியா நிறுவனத்தினை வாங்குவதற்கான, டென்டர் அறிவிப்பினையும் வெளியிட்டது. இதற்குப் பல நிறுவனங்கள் போட்டியிட்டாலும், ஏர் இந்தியா நிறுவனத்தினை தற்பொழுது டாடா நிறுவனம் வாங்க இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த ஏர் இந்தியா நிறுவனத்துடன் சேர்த்து, ஏர் ஏசியா இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற விமான நிறுவனத்தினையும் வாங்க உள்ளது. இதில் ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் 51% பங்குகளையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 100% பங்குகளையும் வாங்க முடிவு செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமான சேவைகளை எல்லாம், சிங்கப்பூர் நாட்டின் விமான நிறுவனங்களுள் ஒன்றான சிங்கப்பூர் ஏர்லைன்சுடன் இணைந்து வாங்க திட்டமிட்டுள்ளது டாடா.
இதற்கானப் பணிகள் அனைத்தும், முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் மீதமுள்ள 49% பங்குகளை, மலேசியாவின் தொழிலதிபர் டோனி பெர்னான்டஸ் வாங்க உள்ளாராம். அதற்கான ஒப்பந்தப் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டது என டாடாவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.