பத்து நாட்களில் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ள மருத்துவமனைகளை, வெறும் எட்டே நாட்களில் உருவாக்கியுள்ளது சீன அரசாங்கம்.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை 17,000 பேர் அதிகாரப்பூர்வமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 304க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்தப் பிரச்சனையை சமாளிக்கும் வகையில், ஆன்லைன், டிவி மற்றும் தொலைபேசி மூலம், பிரச்சாரம், விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த வாரம் சீன அரசாங்கம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அதன்படி, அடுத்த 10 நாட்களில் 1000 படுக்கை வசதிகளைக் கொண்ட, இரண்டு தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்றுக் கூறியிருந்தது. அவ்வாறு கூறியவுடனேயே, வேலையில் இறங்கியும் விட்டது. கடந்த 8 நாட்களுக்குள் முழுமையான மருத்துவமனையை உருவாக்கி உள்ளது. தற்பொழுது அந்த மருத்துவமனைக்குத் தேவையான மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் கொண்டு வருவது மட்டுமே பாக்கி உள்ளது.
அவைகளையும் கொண்டு வந்த பின்னர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அங்கு தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவர். இன்று இரவு அல்லது நாளை காலையில், அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.