தாய்லாந்தில் உள்ள, தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாய்லாந்து நாட்டின் இராணுவத்தில் பணியாற்றி வந்தவர் தோம்மா. இவர், திடீரென்று ஆயுதக் கிடங்கிற்கு சென்றுள்ளார். அவர், அங்கிருந்த நவீன ரக துப்பாக்கியினை எடுத்துக் கொண்டு, அங்கிருந்த உயர் அதிகாரியினை சுட்டுக் கொன்றார். பின், அங்கிருந்த அந்த அதிகாரியின் உறவினரையும் சுட்டுக் கொன்றார்.
இராணுவ ஜீப்பில் ஏறிய அவர், போகும் வழியில் எல்லாம், சாலையில் இருந்த பொதுமக்கள் மீது, கண் மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்பொழுது, அங்கிருந்த மக்கள் ஓட ஆரம்பித்தனர். பலர், துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கப்பட்டனர். இந்நிலையில், தன்னுடைய வாகனத்தினை ஒரு வணிக வளாகத்தின் அருகில் நிறுத்திய அவர், வணிக வளாகத்தினுள் நுழைந்தார்.
பின்னர், கையிலிருந்த துப்பாக்கியினைப் பயன்படுத்தி அனைவரையும் சுட்டார். பலர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தனர். மேலும், பலரும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். பின்னர், துப்பாக்கியுடன் வணிக வளாகத்தில் நுழைந்த தோம்மா, நான்காவது மாடியினை ஆக்கிரமித்தார். அங்கிருந்தவர்களை, பணயக் கைதிகளாக சிறைபிடித்தார்.
இதனால், அங்கு இராணுவத்தினர், பாதுகாப்புத் துறையினர், போலீஸ் உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தோம்மாவின் தாயும் வரவழைக்கப்பட்டார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில், அவரைச் சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர்.
17 மணி நேரமாக நடைபெற்ற இப்போராட்டத்தில், இராணுவத்தினர் தோம்மாவை சுட்டுக் கொன்றனர். பின் அங்கிருந்தவர்களை, பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம், தாய்லாந்து நாட்டினையே உலுக்கி உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில், 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது.