நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று கேள்வி நேரத்தின் பொழுது, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
அவர் பேசுகையில், நிதியமைச்சரின் பேச்சு திருப்திகரமாக இல்லை. இந்தியாவின் பலப் பகுதிகளில், பட்டப்படிப்புப் படித்துவிட்டு, பல லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை. வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால், பலரும் பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகின்றனர்.
பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், நிதியமைச்சர் பேசுகையில், கல்விக் கடன் காரணமாக, தற்கொலை செய்துகொண்டதாக எவ்வித வழக்கும் இல்லை என பேசியுள்ளார். இது அபத்தமானது. படித்து முடித்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என, திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அப்படியொருத் திட்டமானது, தற்பொழுது மத்திய அரசிடம் இல்லை எனவும், கடன் வாங்கியவர்கள் கட்ட வேண்டும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.