நேற்று திருகார்த்திகை திருவிழாவானது தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்கள், சிவன் கோவில்களில் இந்த விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில், மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான 2,300க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் தமிழகம் முழுக்க இருந்து இயக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த மகா தீப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில், நேற்று காலையில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. காலையில் ஆரம்பித்தத் தேரோட்டத்தில் பலரும் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் பலாயிரம் பேர் பங்கு பெற்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியை வணங்கினர்.
இதனையொட்டி, நேற்று மாலையில், திருப்பரங்குன்றம் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து, பல்லாயிரம் பக்தர்கள், திருப்பரங்குன்றம் மலையினைச் சுற்றி, கிரிவலம் வந்தனர்.