அயோத்தியில் அடுத்த மாதம், ராமர் கோயில் கட்டப்பட உள்ள நிலத்தில், டைம் கேப்ஸூலினைப் புதைக்க உள்ளதாக அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம், அயோத்திப் பகுதியில் ராமர் கோயிலினைக் கட்ட எவ்விதத் தடையும் இல்லை என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, அக்கோயிலினைக் கட்டி முடிக்க அறக்கட்டளையினை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு அதற்கான செயல்களில் ஈடுபட ஆரம்பித்தது.
அங்கு ஏற்கனவே, சிவபூஜைகள் மற்றும் ஆகம விதிப்படியான பூஜைகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த சூழ்நிலையில், விரைவில் ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜைகள் நடைபெற உள்ளன. அந்தப் பூஜைகளுக்குப் பின்னர், அங்கு பிரம்மாண்டமாக கோயில் கட்டப்பட உள்ளது.
இந்த பூமி பூஜையில், பிரதமர் மோடி உள்ளிட்டப் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இங்கு எதிர்காலத்தில் எவ்விதப் பிரச்சனைகளும் மீண்டும் வந்துவிடாமல் இருப்பதற்காக, தற்பொழுது அங்கு 2000 அடி ஆழத்தில் டைம் கேப்சூளைப் புதைக்க உள்ளதாக, அறக்கட்டளைத் தெரிவித்துள்ளது.
அந்த அறக்கட்டளையின் நிர்வாகி, இந்தக் கேப்ஸூல்கள் வெளியில் சாதாரணமாக வராதபடி புதைக்கப்பட உள்ளது. இது ராமர் கோயில் கட்டப்பட்டதற்கான சான்றாக, எதிர்காலத்திற்கு இருக்கும் என்றுக் கூறியுள்ளார்.