இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது, மே-17ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்பட உள்ளது.
இந்த நான்காவது கட்ட ஊரடங்கில், பல தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூழ்நிலையில், ஊரடங்குத் தொடக்கத்தின் பொழுது, உலகின் நம்பர் ஒன் பணக்காரக் கோயிலான, திருமலை திருப்பதி கோயில் மூடப்பட்டது. அப்பொழுது முதல் தற்பொழுது வரை, இன்னும் திருப்பதி கோயில் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், அடுத்த ஊரடங்கில் இந்தக் கோயில் திறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகள் அனைத்தும், திருப்பதி கோயிலில் நடைபெற்று வருகின்றன. இது குறித்து, திருப்பதி நகராட்சி கமிஷனர் கிரிஷ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில், திருப்பதியில் இருந்து வெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால், கண்டிப்பாக 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். சாலையில் எச்சில் துப்புபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதமும், சமூக இடைவெளியினைப் பின்பற்றாதவர்கள் மற்றும் சானிட்டைசர் இல்லாதக் கடைகளுக்கும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.