இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வினை தமிழக அரசு ரத்து செய்தது.
இந்தியா முழுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, 11ம் வகுப்புப் பொதுத்தேர்வு உள்ளிட்டவைகள் நடைபெறாமல் இருந்தன. இதனையடுத்து, அவர்களுக்கு ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.
இருப்பினும், தற்பொழுது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வினை நடத்த வேண்டாம் என, எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து, பத்தாம் வகுப்புத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்களைப் பொறுத்து, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க உள்ளதாக, தமிழக அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, பலத் தனியார் பள்ளிகள் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்களை பாஸ் செய்ய வைப்பதற்காகவும், அதிக மதிப்பெண்களை பெற வைப்பதற்காகவும், காலாண்டு, அரையாண்டுக் கேள்வித் தாள்களை அச்சடித்துக் கொடுத்து, தேர்வு எழுத வைப்பதாகப் புகார் எழுந்தது. மேலும், ஒரு சிலப் பள்ளிகள், முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனைக் காரணமாக கொண்டு, தமிழகப் பள்ளிக் கல்வித்துறையானது, புதிய அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு மதிப்பெண்ணிற்குப் பதில், கிரேட் முறையில் மதிப்பெண் வழங்க முடிவு செய்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கின்றன.