இந்தியாவின் லடாக் பகுதியில் இந்திய சீன வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று வீரர்கள் பலியாகினர். அதில், தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தினைச் சேர்ந்த பழனி என்ற வீரர் வீர மரணம் அடைந்தார். அவருடைய பூத உடலானது, தற்பொழுது அரசு மரியாதையுடன் தமிழகம் வர உள்ளது.
சீனாவின் வீரர்களுடன் நடைபெற்ற சண்டையில், இரண்டு நாட்டு வீரர்களும் கற்களால் தாக்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதலில் சீனாவின் நான்கு வீரர்கள் பலியாகி இருக்கின்றனர் என, சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலமையைக் கட்டுப்படுத்த இரண்டு நாட்டு இராணுவமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
வீர மரணம் அடைந்த பழனியின் மறைவிற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய இரங்கலைத் தெரிவித்து உள்ளார். மேலும், அவருடைய குடும்பத்தினரிடம் அவருக்காக 20 லட்ச ரூபாயினை, வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ற அரசாங்க வேலை வழங்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, பழனியின் பூத உடலுக்கு முழுமையான அரசு மரியாதை செய்யப்பட வேண்டும் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். பழனியின் மறைவிற்கு பலத் தலைவர்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.