டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில், முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இதுவரை 20 பேர் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளனர். மேலும், பலர் மீது போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இந்த வழக்கில், இரண்டு வட்டாட்சியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட, தேர்வர்களுக்கு வாழ்நாள் தடையினை, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விதித்துள்ளது. அது மட்டுமின்றி, அவர்களிடமும் தீவிர விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், இந்த முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்ட ஜெயக்குமார் என்பவரையும், சின்னாண்டி என்பவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதில், ஜெயக்குமாரினைப் பற்றியத் தகவல் தெரிவிப்பவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டும் உள்ளது.
இருப்பினும், அவர் எங்கு இருக்கின்றார் என்பது பற்றியத் தகவல்கள் தற்பொழுது வரை கிடைக்கவில்லை. எனவே, அவருடைய வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர். அது மட்டுமின்றி அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.