வங்கதேசத்தில், இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
வங்கதேசத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும், ரயில் பயணங்களையே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில் ரயிலின் உள்ளே மட்டுமே அமர்ந்து பயணம் செய்வார்கள். ஆனால், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உட்பட பல நாடுகளில், ரயிலில் கால் வைக்க இடம் இருந்தாலே போதும், ஈ மொய்ப்பது போல ரயிலில் ஒட்டிக் கொள்வார்கள். அந்த அளவிற்கு ரயிலினை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
கடந்த செவ்வாய் கிழமை அன்று, மத்திய வங்கதேசத்தில் உள்ள பிரமான்பாரியா என்ற மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் சிக்னலை மதிக்காமல் வந்துள்ளன. இதனையடுத்து, ஒன்றுடன் ஒன்று மோதியதில் மொத்தம் 16 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து விசாரிக்கும் பொழுது, முதற்கட்ட விசாரணையில், இரயிலினை இயக்கிய ஓட்டுநர்கள், ரயில்வே வழங்கும் சிக்னலை மதிக்காமல் ஓட்டியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹஸீனா ஆகியோர் இறந்தவர்களுக்குத் தங்களுடைய ஆறுதல்களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.