ஆகஸ்ட் 12ம் தேதி வரை இந்தியா முழுவதும், ரயில்கள் இயக்கப்படாது என, இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் வருகின்ற ஜூன் 30ம் தேதியுடன், ஐந்தாவது ஊரடங்கு உத்தரவானது முடிவிற்கு வர உள்ளது. இதனால், வருகின்ற ஜூலை மாதம் முதல் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக, தகவல்கள் வெளியாகின. இருப்பினும், தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவிக் கொண்டே இருப்பதால், ரயில்களை இயக்கினால், இன்னும் அதிகமாகப் பரவ ஆரம்பித்துவிடும்.
இந்த ஊரடங்கில் பல லட்சம் பேர், நடைபயணமாக தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்காக கடந்த மாதம் முதல், ஸ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகின்றது. இந்நிலையில், தற்பொழுது அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி வரை, புதிதாக எவ்வித ரயில்களையும் இயக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
இதனால் தொடர்ந்து ஸ்ராமிக் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அனைத்து, எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட், பேசஞ்சர் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் தற்பொழுது ரத்து செய்யப்பட்டு உள்ளன. புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால், பொதுமக்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதில், தொய்வு ஏற்பட்டு உள்ளது.