இந்தியா முழுக்கத் தற்பொழுது, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் இரண்டாவது நபருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இது குறித்து, இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அவர் பேசுகையில், டெல்லியில் இருந்து வந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர் தற்பொழுது, சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும், சோதனை மேற்கொள்ள உள்ளோம் என அவர் தெரிவித்தார். அந்த இளைஞர் இரயிலில் வந்ததால், மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், அவர்களிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே, ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரத்தினைச் சேர்ந்த இளைஞரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குணமானதும், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். முகமூடி, சானிட்டைசர், உடல் வெப்பத்தினை அளவிடும் கருவிகளை அதிக விலைக்கு விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.