ஆத்தூரில் இயங்கி வருகின்ற ஜவ்வரிசி ஆலையில் நடைபெற்ற எதிர்பாராத விபத்தில், விஷவாயு தாக்கி இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள சதாசிவபுரத்தினைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனக்கு சொந்தமாக ஒரு ஜவ்வரிசி ஆலையினை வைத்துள்ளார். இதில், 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு வெளியாகும் கழிவில் இருந்து, எரிவாயு தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
இங்கு வேலைப் பார்க்கும் கார்த்தி மற்றும் ஆறுமுகம் ஆகியோர், இந்த எரிவாயுவினை கவனித்து வருகின்றனர். இதில், நேற்று (ஏப்ரல்11) அன்று, எரிவாயுத் தொட்டியில் காற்று செல்வதில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கார்த்தி உள்ளே இறங்கி அடைப்பை எடுக்க முயற்சித்தார். இதில், எதிர்பாராத விதமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரைக் காப்பாற்றுவதற்காக ஆறுமுகமும், அந்தத் தொட்டியில் குதித்துள்ளார்.
ஆனால், இருவரும் மயங்கி அந்தத் தொட்டிக்குள்ளேயே விழுந்து விட்டனர். நீண்ட நேரம் ஆகியும், இருவரும் வெளியே வராததால் அவர்களை தேடி மற்ற ஊழியர்கள் வந்தனர். அப்பொழுது, இருவரும் தொட்டிக்குள் சடலமாக மிதந்துள்ளனர். இது குறித்து, போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், அந்த உடல்களை மீட்டனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.