அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. இதனால், பொதுமக்கள் கலவரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் வசித்து வந்த ஜார்ச் ப்ளாய்ட் என்பவர், அமெரிக்க போலீசாரால் படுகொலை செய்யப்பட்டார். அவர் கருப்பர் என்பதால், இனவெறித் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. அவருடையக் கழுத்தில், போலீசார் காலை வைத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பானது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பலப் பகுதிகளில், போராட்டம் வலுவடைந்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அமெரிக்க போலீசார் திணறி வருகின்றனர். அனைத்து அமெரிக்க கருப்பின மக்களுக்கிடையிலேயும் இந்த விஷயம் தீயாகப் பரவி வருகின்றது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், போராட்டத்தினை மாகாண ஆளுநர்கள் கட்டுப்படுத்தாவிட்டால், இராணுவத்தினைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்துவேன் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க போலீசார் பலரும், போராட்டக்காரர்களைத் தடுக்கும் பொழுது, மண்டியிடுகின்றனர். ஒரு சிலர், போராட்டக்காரர்களை கட்டித் தழுவி ஆறுதல் கூறுகின்றனர். அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் பொழுது, காவலர்கள் கவச உடைகளுடன் இருந்த நிலையில், அப்படியே தரையில் மண்டியிட்டு போராட்டக்காரர்களை தடுத்தனர்.
இது போன்ற சம்பவங்களால், போராட்டக்காரர்கள் தற்பொழுது நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், தங்களுடையப் போராட்டத்தினை நிறுத்தப் போவதில்லை எனத் தெரிவித்தும் உள்ளனர்.