கொரோனா வைரஸிற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, அமெரிக்காவினைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக, உலகின் நம்பர் ஒன் வல்லரசான அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டில் தற்பொழுது வரை, 13,50,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 1,38,000 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 66,000 பேர் பலியாகி உள்ளனர்.
இதனால், அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. தினமும் செய்தியாளர்களை சந்தித்து, இது குறித்துப் பேசி வருகின்றார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்த கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், மொத்தம் 70க்கும் மேற்பட்ட சர்வதேச மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்காவில் பலர் மரணமடைந்து வருவதால், மரணத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் இருந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை அதிகளவில் இறக்குமதி செய்தது. அதே போல், பல மருந்துகளை பரிசோதனையும் செய்தது. அதில், தற்பொழுது ரெம்டெசிவர் என்ற மருந்தினை அமெரிக்கா அதிகளவில் பயன்படுத்துவதாக, அறிவித்துள்ளது.
இது குறித்து, கலிபோர்னியாவின் கிலியட் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மூன்று வாரமாக, பல்வேறு சோதனைகளுக்குப் பின், இந்த மருந்தானது பொதுமக்களிடம் பயன்படுத்தப்பட்டது. அதில், ஒரு வாரத்திலேயே, இந்த மருந்தினைப் பயன்படுத்திய நபர்கள் பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இதனை அமெரிக்காவின் என்ஐஏஐடி அமைப்பும், அறிக்கையாக வெளியிட்டுள்ளது. கலிபோர்னியாவின் கிலியட் நிறுவனம் 31% கூடுதல் பலனை வழங்க ஆரம்பித்துள்ளது என்று விளக்கமளித்துள்ளது. இந்த மருந்தால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகளும் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், இதனையே அந்நாட்டு மக்களுக்கு அந்த அமைப்பானது, பரிந்துரைத்துள்ளது. இதனால், அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.