உலக நாடுகள் பலவும், தங்கள் நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்கும் படி, ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்துள்ளன. இவ்வாறு இருப்பதன் மூலம், கொரோனா வைரஸானதுப் பரவாமல் தடுக்க இயலும் என நம்பப்படுகின்றது.
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக, 34,000 பேர் அமெரிக்காவில் மரணமடைந்து உள்ளனர். 6,75,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமெரிக்க மக்கள், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்நாட்டின், மிச்சிகன், ஓகியோ, கென்டகி, மினிசோட்டா, உட்டா, வடக்கு கரோலினா உள்ளிட்ட மாகாணங்களின் தலைநகரங்களில் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை, தடுக்க முடியாமல் அமெரிக்க போலீசாரும் விழிபிதுங்கி நிற்கின்றனர். இவ்வாறு போராடுவதால், விரைவாக வைரஸானது பரவும் அபாயம் உள்ளது.
அந்த மாகாண ஆளுநர்கள் பொதுமக்களிடம், வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தும் உள்ளனர். ஆனால், அதனை எல்லாம் பொதுமக்கள் சட்டை செய்யவே இல்லை. உடனடியாக, ஊரடங்கினை தளர்த்துங்கள் எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.