சிவன் மலை ஆண்டவன் கோயில் பற்றி அனைவருக்கும் தெரியும். அங்குள்ள உத்தரவு பெட்டியானது, தமிழ் மக்கள் அளவில் புகழ்பெற்றது. தற்பொழுது அந்த ஆண்டவன் உத்தரவு பெட்டியில், முருகனின் வேல் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன்மலை மீது தான், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அதில், ஆண்டவர் பெட்டி என்ற ஒன்று உண்டு. அதில், கடவுளின் உத்தரவுப் படி, பொருட்கள் வைக்கப்படும். தன்னுடையப் பக்தர்களின் கனவுகளில் தோன்றும் முருகன், எதை அந்தப் பெட்டியில் வைக்க வேண்டும் என்று, உத்தரவிடுவார். அவருடைய உத்தரவினை அடுத்து, அவருடைய பக்தர்கள் அவர் கூறியதை அந்தப் பெட்டியில் வைப்பர். அதற்கு அந்தக் கோயில் அர்ச்சகரின் அனுமதியும் தேவை. கோயிலில் உள்ள அர்ச்சகர்கள், பூ போட்டு பார்ப்பர். அதில், வெள்ளைப் பூ வந்தால், அந்தப் பக்தர்கள் கொண்டு வந்த பொருட்கள், அந்தப் பெட்டியில் வைக்கப்படும்.
அதனடிப்படையில், கடந்த ஜனவரி 29ம் தேதி அன்று, அந்தப் பெட்டியில், மஞ்சள் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்பொழுது அது மாற்றப்பட்டு உள்ளது. நெல்லையைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரின் கனவில் ஆண்டவர் வந்துள்ளார். அதில், வேலை வைத்து வழிபடுமாறுக் கூறியுள்ளார். இதற்காக, வேல் வாங்கிக் கொண்டு கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள அர்ச்சகர்கள், பூ போட்டு பிரசங்கம் பார்த்துள்ளனர். அதில், வெள்ளைப் பூ வந்ததை அடுத்து, அந்தப் பெட்டியில் வேல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடவுள் தற்பொழுது நடக்கின்ற பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார் என்று, பக்தர்கள் கூறுகின்றனர்.