2 வயது குழந்தை சுஜித் குழியில் விழுந்த நாள் முதல், மீட்புப் பணிகளை தொடர்ந்து அருகிலேயே இருந்து கண்காணித்து வந்த விஜயபாஸ்கர் தன்னுடைய அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், குழந்தை சுஜித் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் அந்தக் குழந்தைக்காக இரங்கல் கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளார்.
அதில், நான் மட்டுமல்ல இந்த உலகம தன் பிள்ளையாய் நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கின்றது. என் மனம் வலிக்கிறது. எப்படியும் வந்துவிடுவாய் என்று தான் உணவின்றி, உறக்கமின்றி, இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை.
கருவறை இருட்டுபோல் உள்ள இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை! மருத்துவமனையில் வைத்து, உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்துக் காத்திருந்தேன். இப்போது, மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில், இதயம் கனத்து கிடக்கிறது.
எண்பத்தைந்து அடி ஆழத்தில், நான் கேட்ட உன் மூச்சு சப்தம் தான் என்னை மீட்புப் பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பினைப்பில் இணைத்து, இயங்க வைத்தது.
மனதை தேற்றி கொள்கிறேன். ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை. சோகத்தின் நிழலில், வேதனையின் மடியில். இப்படிக்கு விஜயபாஸ்கர் என்ற கடிதத்தினை எழுதியுள்ளார்.