கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது, தற்பொழுது உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதனால், மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். ஐம்பது லட்சம் பேர், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சீனா தான் இந்த வைரஸினை உலகம் முழுவதும் பரப்பி இருப்பதாக அந்த நாட்டின் மீது, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்டப் பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. உலக சுகாதார அமைப்பும், தினமும் ஒரு தகவலை மாறி மாறி வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றது.
இதனிடையே, தற்பொழுது இந்த வைரஸ் பரவக் காரணமாக இருந்த சீனாவோ, பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது. அங்கு, பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பல நாடுகளும், இந்த வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், தொடர்ந்து மருந்துக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல பின்னடைவுகள் ஏற்பட்டு உள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சீன அதிபர் ஜி ஜிங்பிங், கொரோனா வைரஸ் குறித்துப் பேசினார். அவர் பேசுகையில், இந்த வைரஸால் பலர் மரணமடைந்து உள்ளனர். இந்த வைரஸ் தொற்று யாரும் எதிர்பாராத ஒன்று. இதற்கு மருந்துக் கண்டுபிடிக்கும் முயற்சியானது, தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், அது உலகின் பொது உடைமை ஆக்கப்பட்டு விடும் எனவும், அதனை அனைத்து நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.