கொரோனா வைரஸ் காரணமாக, அப்பகுதி மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால், ஊஹாண் மாவட்டமே வெறிச்சோடி காணப்படுகின்றது.
கடந்த ஆண்டு இறுதியில், ஊஹாண் மாவட்டத்தின் வன விலங்கு சந்தையில் இருந்து, இந்த கொரோனா வைரஸானது பரவ ஆரம்பித்தது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதற்குள் அந்த வைரஸால் தற்பொழுது வரை 230 பேர் மரணமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், வைரஸானது ஊஹாண் மாவட்டத்தில் இருந்து பரவ ஆரம்பித்ததால், அந்த ஊருக்குச் செல்லும் பாதைகளுக்கு சீன அரசாங்கம் சீல் வைத்துள்ளது. அது மட்டுமின்றி, ஊரினைச் சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து, இராணுவ கண்காணிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊருக்குள் செல்ல ஆம்புலன்ஸ் தவிர, வேறு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. உணவிற்காக கூட, அப்பகுதி மக்கள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. தொடர்ந்து, இராணுவக் கண்காணிப்பு, ரோந்து பணிகள் என, அந்த ஊரே பரபரப்பாக உள்ளது. அதே சமயம், அந்த ஊர் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், தற்பொழுது அந்த மாகாண அரசே செய்து கொடுத்து வருகின்றது.
கடந்த 23ம் தேதியில் இருந்து தற்பொழது வரை, ஊஹாண் பகுதி மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் கடும் விரக்தியில் இருக்கின்றனர். 24ம் தேதி அன்று பிறந்த, அந்த நாட்டின் புத்தாண்டினைக் கூட, அவர்கள் வீட்டிற்குள்ளேயே கொண்டாடும் நிலை உருவானது. அங்குள்ள மக்களுக்கு, மனநல மருத்துவர்கள் ரேடியோ மூலமும், டிவி நிகழ்ச்சிகள் மூலம் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.