பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ரபேல் போர் விமானங்கள் வந்துள்ளன. இதற்கு எதிர்கட்சிகள் உள்ளிட்டப் பலரும் தங்களுடையப் பாராட்டுக்களைத் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், இந்த ஐந்து விமானங்களையும் இந்திய விமானிகளே கடந்த 27ம் தேதி முதல் இயக்கி வருகின்றனர். முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதுவகை போர் விமானமான இதனை இயக்குவதற்கு, இந்தியாவின் 12 விமானப்படை விமானிகளுக்கு பிரான்ஸ் நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவின் விமானப் படைக்கு புதிய போர் விமானங்கள் வாங்கப்பட்டன. அதற்குப் பின்னர், தற்பொழுது தான் போர் விமானங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த விமானத்தினை இந்தியா வாங்குவதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டவர் ஏர்கமாண்டர் ஹிலால் அஹ்மத் ரதார். காஷ்மீர் மாநிலத்தினைச் சேர்ந்த இவர், 1988ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார்.
2019ம் ஆண்டு ஏர்கமோடராக பதவி உயர்வு பெற்றார். மிக்-21 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்களை, சுமார் 2000 மணி நேரங்கள் ஓட்டிய அனுபவம் உள்ள இவர், பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை ஓட்டி வந்த முதல் இந்தியர் என்றப் பெருமையையும் பெற்று உள்ளார்.