சீனாவின் கைப்பாவையாக, உலக சுகாதார மையம் செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்து இருந்தாலும், இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பது என்னமோ, அமெரிக்கா தான். உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் தான், இந்த வைரஸானது கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது.
இந்நிலையில், தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவின் மீதும் உலக சுகாதார அமைப்பின் மீதும் குற்றம் சுமத்தி வருகின்றார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார மையம் செயல்பட்டு வருகின்றது எனவும், அதனால் அதனை எங்களால் நம்ப முடியாது எனவும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், தற்காலிகமாக நிறுத்தியுள்ள உலக சுகாதாரத்திற்கான நிதியினை, நிரந்தரமாக நிறுத்த பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். நாங்கள் தான் உலகிலேயே அதிகளவிலான நிதியினை, உலக சுகாதார மையத்திற்கு வழங்கி வருவதாகவும், ஆனால் எங்களுக்கு சரியான வழிகாட்டுதலை உலக சுகாதார மையம் காட்டவில்லை எனவும் கூறியுள்ளார்.
நாங்கள் ஆண்டுக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தந்து வருகின்றோம் எனவும், சீனா வெறும் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே, வழங்கி வருகின்றது எனவும் கூறிய அவர், விரைவில் 450 மில்லியன் டாலரை வெறும் 40 மில்லியன் டாலராக மாற்ற திட்டங்கள் தயாராகி வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.