வருடா வருடம், மதுரை மாநகரில் சித்திரைத் திருவிழாவானது, கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சித் திருக்கல்யாணம், அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் உள்ளன.
இதில், பல லட்சக்கணக்கானப் பக்தர்கள் கலந்து கொண்டு, கடவுளின் தரிசனத்தை கண்டு களிப்பர். இந்தத் திருவிழாவில் மதுரை மட்டுமின்றி, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு கொண்டாடுகின்றனர். இந்த விழாவானது சித்திரை மாதம் வளர்பிறை சமயத்தில் நடைபெறும்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, தற்சமயம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி அன்று வரை, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்க உள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 14க்குப் பிறகு, இந்த ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படுமா அல்லது, அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்படுமா என்றக் கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்குப் பதிலளித்த, மதுரை மேற்குத் தொகுதி எம்எல்ஏவும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ, அரசாங்கம் எடுக்கும் முடிவினைப் பொறுத்துத் தான், சித்திரைத் திருவிழா நடைபெறுவது பற்றி முடிவு எடுக்கப்படும். வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அனைத்தும் நடைபெற வேண்டும் என, அவர் கூறியுள்ளார். இதனால் இந்த ஆண்டு, சித்திரைத் திருவிழாவானது நடைபெறுமா என்பது கேள்விக் குறியாகி உள்ளது.