உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தினால், பல நாடுகள் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்து உள்ளன. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனை முன்னிட்டு, பொதுப் போக்குவரத்து முதல், தனிப் போக்குவரத்து வரை அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளன. ஆம்புலன்ஸ், காய்கறி வாகனங்கள், மருத்துவ வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. இதனால், உலகளவில் ஏற்பட்டு வந்த சுற்றுச்சூழல் பாதிப்பானது குறைந்துள்ளது.
இந்தியாவினைப் பொறுத்த வரையில், காற்று மாசுபாடு தான், மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சனைகளுக்குள் முதன்மையானதாக பார்க்கப்படுகின்றது. டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில், காற்று மாசுபாட்டின் அளவானது மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது. இமய மலைக்கு அருகில் சென்றால் தான், அதனை முழுமையாகப் பார்க்க இயலும். தற்பொழுது, அதனை 200 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து கொண்டே பார்க்க முடிகின்றது.
இந்தப் புவியினை காக்கும் ஓசோன் படலமானது, தற்பொழுது பூரணமாக மீண்டு வருகின்றது. தொடர்ந்து வெளியேற்றப்பட்ட நச்சுப் புகை, வெப்பத்தின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த ஓசோன் படலமானது, தற்பொழுது பழைய நிலைக்குத் திரும்பி வருகின்றது. மேலும், அண்டார்டிகா பகுதியிலும், வெப்பத்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டக் காட்டுத் தீயில் பல கோடி மரங்கள் எரிந்து சாம்பலாகின. இந்நிலையில், அங்கு எரிந்தும் எரியாமல் இருந்த மரங்களில் புதிய துளிர்கள் வளர்ந்துள்ளன. இது மாபெரும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். அங்கு, இயற்கையானது தன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்தியாவினைப் பொருத்தமட்டில், ஒலி மாசின் அளவானது முற்றிலுமாகக் குறைந்துள்ளது எனலாம்.
அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் இந்த வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி இருந்தாலும், அங்குள்ள சுற்றுச்சூழலானது, பெருமளவில் மீள ஆரம்பித்துள்ளது என்ற உண்மையையும் நாம் பார்க்க வேண்டி உள்ளது.