நேற்று முன் தினம், கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின், பேச்சு இணையத்தில் கசிந்தது. இதனையடுத்து, அவர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் தரப்பில், இந்திய குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கர்நாடாகவில், சித்தராமையாவின் ஆட்சிக்கு ஆதரவளித்து வந்த எம்எல்ஏக்களில் 15 பேர் திடீரென்று தங்களுடைய ஆதரவினை விலக்கிக் கொண்டனர். இதனையடுத்து, சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த சித்தராமையா பதவி விலகினார். ஆதரவினை விலக்கிக் கொண்ட எம்எல்ஏக்களின், இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனிடையே, கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா மீண்டும் பதவியேற்றார். அவர் அந்த ஆதரவு எம்எல்ஏக்கள் பற்றிப் பேசிய வீடியோ தற்பொழுது லீக்காகி உள்ளது. அதில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைப்பதற்காக, அந்த 15 எம்எல்ஏக்கள் தங்களுடைய பதவியைத் தியாகம் செய்துள்ளனர். ஆபரேஷன் தாமரை திட்டம் நமது தேசிய தலைவரின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அவர் அந்த எம்எல்ஏக்களை மும்பையில் உள்ள விடுதியில் தங்க வைத்திருந்தார் என்று பேசியுள்ளார்.
இதனை இணையத்தில் பகிர்ந்த காங்கிரஸ் கட்சியினர், இது குறித்து கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும், கர்நாடாகவின் காங்கிரஸ் தலைவர், முன்னாள் முதல்வர் சித்தாராமையா உட்பட பலரும், கர்நாடக ஆளுநர் திரு. வஜூபாய் வாலாவினை சந்தித்து, இது குறித்து கடிதம் மற்றும் அந்த ஆடியோ அடங்கிய பென் டிரைவினையும் வழங்கினர்.
எடியூரப்பா மீதும், அமித் ஷா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்தக் கடிதத்தினை ஜனாதிபதியிடம் அளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.