இந்தியாவின் ஐந்தாவது தனியார் பெரிய வங்கியாக வளர்ந்துள்ள எஸ் பேங்க்கானது, தற்பொழுது நிதிப் பிரச்சனையில் சிக்கியுள்ளது. இதனால், அந்த வங்கியினை, இந்தியாவின் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா நேரடியாக தன்னுடையக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தது. அந்த வங்கியானது, அனைத்துவித சட்டப்பூர்வமான செயல்களில் ஈடுபடவும் தடை விதித்தது.
மேலும், அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 50,000 ரூபாய் பணத்தினை மட்டுமே எடுக்க, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த எஸ் பேங்க். கடந்த 16 ஆண்டுகளில், யாரும் காணாத வளர்ச்சியினை, இந்த எஸ் பேங் வங்கியானது பெற்றது. மொத்தமாக, 10,000 ஊழியர்களுடன் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிளைகளை ஆரம்பித்து கொடிக்கட்டிப் பறக்கத் தொடங்கியது.
இவ்வாறு இருந்து வந்த வங்கியானது, திடீரென்று எப்படி நிதிப் பிரச்சனைகளில் சிக்கும் என்று சந்தேகம் எழுந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அமலாக்கத் துறை, அந்த வங்கியின் நிறுவனர் 62 வயதுடைய ரானா கபூரினை கைது செய்து விசாரணை நடத்தியது. சுராம், 20 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இதில், டிஎச்எப்எல் என்ற நிறுவனத்திற்கு, பலநூறு கோடி ரூபாய் வரை, கடன் வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
அதே சமயம், அவ்வாறு டிஎச்எப்எல் நிறுவனம் பெற்றக் கடனானது, வாராக் கடனாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்த நிறுவனம் 600 கோடி ரூபாயினை மற்ற நிறுவனங்களுக்கு வழங்கியும் இருப்பது, அமலாக்கத் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னுடைய மகள்கள் ராகீ கபூர் தாண்டன், ரோஷிணி கபூர் மற்றும் ராதா கபூர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கு பல நூறு கோடி ரூபாயானது, சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ரானா கபூரின் மனைவியின் கணக்கிலும், பல கோடி ரூபாயானது முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனைகளில், விலை உயர்ந்த ஓவியங்கள், செயல்படாத நிறுவனங்கள் மற்றும் 2000 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் குறித்து ஒப்பந்த ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், இவர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி, இவர், தகுதியில்லாத நிறுவனங்களுக்கு, கமிஷன் வாங்கிக் கொண்டு, பெரிய அளவிலான தொகையினை கடனாகக் கொடுத்து இருப்பதும், அவைகள் வாராக் கடனாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நீதிபதியில் முன்னிலையில், ரானா கபூரினை அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். அமலாக்கத் துறையின் வேண்டுகோளினை ஏற்று, வருகின்ற 11ம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினார் நீதிபதி. இதனால், வருகின்ற நான்காம் தேதி வரை, அமலாக்கத்துறையினர் எஸ்பேங்க் நிறுவனர் ரானா கபூரினை கேள்விகள் கேட்க உள்ளனர்.